விளையாட்டு வினையானது: மரப்பெட்டிக்குள் ஒளிந்த 7 வயது சிறுமி மூச்சுத்திணறி சாவு தங்கை உயிர் தப்பினாள்

திருவான்மியூரில், கண்ணாமூச்சி விளையாட்டின்போது மரப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்ட 7 வயது சிறுமி, கதவு தாழ்ப்பாள் பூட்டிக்கொண்டதால் மூச்சுத்திணறி பலியானார். அதிர்ஷ்டவசமாக அவளது தங்கை உயிர் தப்பினாள்.
விளையாட்டு வினையானது: மரப்பெட்டிக்குள் ஒளிந்த 7 வயது சிறுமி மூச்சுத்திணறி சாவு தங்கை உயிர் தப்பினாள்
Published on

அடையாறு,

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகள்கள் தனுஸ்ரீ(வயது 7), சாரு(5). அங்குள்ள அரசு பள்ளியில் தனுஸ்ரீ 3-ம் வகுப்பும், சாரு, 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் இருவரும் வீட்டில் இருந்தனர்.

நேற்று திருப்பதி வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். நேற்று மதியம் அக்காள்-தங்கை இருவரும் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது சிறுமிகள் தனுஸ்ரீ, சாரு இருவரும் வீட்டில் இருந்த ஒரு பெரிய மரப்பெட்டிக்குள் இறங்கி பெட்டியின் கதவை மூடி ஒளிந்து கொண்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக பெட்டியின் தாழ்ப்பாள் மூடிக்கொண்டதால் மீண்டும் அவர்களால் கதவை திறந்து கொண்டு வெளியே வரமுடியவில்லை. இருவரும் பெட்டிக்குள் மயங்கி விட்டனர்.

சமையல் வேலையை முடித்துவிட்டு வந்த அவர்களது தாயார், அங்கு விளையாடிக்கொண்டிருந்த மகள்கள் இருவரும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் அருகே அக்கம் பக்கம் முழுவதும் தேடியும் இருவரையும் காணவில்லை.

பின்னர் வீட்டுக்கு வந்த அவர், சந்தேகத்தின்பேரில் வீட்டில் இருந்த மரப்பெட்டியை திறந்து பார்த்தார். அதன் உள்ளே தனது மகள்கள் இருவரும் மயங்கி கிடப்பதை கண்டு அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுமிகள் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி தனுஸ்ரீ, ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இளைய மகள் சாரு மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பலியான தனுஸ்ரீயின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுமி மூச்சுத்திணறி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com