மணல் அள்ளிய 5 வாகனங்களை பிடித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போலீசில் ஒப்படைத்தார்

சரபங்கா நதியில் மணல் அள்ளிய 5 வாகனங்களை பிடித்து அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜா எம்.எல்.ஏ. போலீசில் ஒப்படைத்தார்.
மணல் அள்ளிய 5 வாகனங்களை பிடித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போலீசில் ஒப்படைத்தார்
Published on

தேவூர்,

சேலம் மாவட்டத்தில் ஓடும் சரபங்கா நதி கடந்த 8 மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் தேவூர், கப்பரையான்காடு, அம்மன் கோவில், செட்டிபட்டி பாலம், ஓடசக்கரை, கைகோளபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் சரபங்கா நதியில் இருந்து மணல் கடத்தல் படுஜோராக நடந்து வந்தது.

எனினும் மணல் கடத்தலை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சரபங்கா நதியில் இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்களில் மணலை அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அ.தி.மு.க.வை சேர்ந்த சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தனது காரில் தேவூர், அரசிராமணி, செட்டிபட்டி பகுதிகளில் சரபங்கா நதி கரையோரம் சென்றுள்ளார். அப்போது நதியில் மணல் அள்ளி கொண்டிருந்த 5 வாகனங்களை பார்த்தார். உடனே தனது காரை நிறுத்தி, இறங்கி சென்று மணல் அள்ளிய வாகனங்களை பிடித்தார். தொடர்ந்து தேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் மணல் அள்ளிய 2 பொக்லைன் எந்திரங்கள், 2 டிப்பர் லாரிகள் உள்பட 5 வாகனங்களை ராஜா எம்.எல்.ஏ. ஒப்படைத்தார். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சரபங்கா ஆற்றில் சுமார் 20 அடி ஆழத்துக்கு ஆங்காங்கே மணலை வெட்டி கடத்தி உள்ளனர். எனவே அதிகாரிகள் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com