2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

குளச்சல் அருகே 2 வீடுகளில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
2 வீடுகளில் நகை-பணம் திருட்டு
Published on

குளச்சல்,

குளச்சல் அருகே 2 வீடுகளில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

ஓய்வு பெற்ற ஆசிரியர்

குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்தவர் பீட்டர், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி லத்தீஸ் மேரி (வயது 70). இவர்களின் பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. பீட்டரும் இறந்து விட்டதால், லத்தீஸ் மேரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

தற்போது கோவில் திருவிழா நடந்து வருகிறது. கோவில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லத்தீஸ் மேரி வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

நகை-பணம் திருட்டு

கோவில் நிகழ்ச்சி முடிந்ததும், லத்தீஸ் மேரி வீட்டுக்கு திரும்பி வந்தார். அதன்பின்னர் அவர் மறுநாள் காலையில் பார்த்த போது பீரோ திறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே பீரோவில் வைத்திருந்த பொருட்களை சரி பார்த்த போது, 3 பவுன் நெக்லஸ், 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. லத்தீஸ் மேரி கோவிலுக்கு சென்ற போது மர்மநபர் யாரோ வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இதே போல் அருகில் உள்ள உறவினர் ரொனால்டு ரீகன் என்பவர் வீட்டின் கதவையும் மர்ம நபர் உடைத்து உள்ளே புகுந்து ரூ.16 ஆயிரம் மற்றும் பவுன் கம்மலையும் திருடி சென்றுள்ளார்.

இந்த இரு சம்பவம் குறித்தும் லத்தீஸ்மேரி, ரொனால்டு ரீகன் ஆகியோர் குளச்சல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com