

ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் சிரமப்பட்டனர். இதைத்தொடர்ந்து தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படை போலீசார் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து தொடர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா புத்தூர் சுரட்டைபாளையத்தை சேர்ந்த செல்வத்தின் மகன் வீரமணி (வயது 26), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிவலசு நாயக்கர் தெருவை சேர்ந்த நடராஜின் மகன் காமராஜ் (26), திருச்செங்கோடு எறையமங்கலம் காட்டுவேலாம்பாளையம் நாயக்கர் தெருவை சேர்ந்த தங்கராஜ் என்கிற முரட்டுகாளை (40), அதே பகுதியை சேர்ந்த நடராஜின் மகன் விஜி (21) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதில் வீரமணி, காமராஜ் ஆகியோர் மீது ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பொன்னாகரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழப்பறி, திருட்டு உள்ளிட்ட வழங்குகள் உள்ளன. இதேபோல் தங்கராசு, விஜி ஆகியோர் மீது ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், ஒரு திருட்டு முயற்சி வழக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளன.
வீரமணி, காமராஜ் ஆகியோரிடம் இருந்து 35 பவுன் நகையையும், தங்கராசு, விஜி ஆகியோரிடம் இருந்து 24 பவுன் நகையையும் என மொத்தம் 59 பவுன் நகையை போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து கைதான 4 பேரையும் போலீசார் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.