வீட்டில் வரைபடங்கள், வெடி பொருட்கள் சிக்கின ராமநகர் அருகே பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது

ராமநகர் அருகே வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து வரைபடங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வீட்டில் வரைபடங்கள், வெடி பொருட்கள் சிக்கின ராமநகர் அருகே பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க அவர் சதியில் ஈடுபட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், அதனால் நாடு முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்கும்படியும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ராமநகர் (மாவட்டம்) புறநகரில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ராமநகர் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவில் அதிகாரிகள் விரைந்து சென்றனர். பின்னர் ராமநகர் புறநகர் ரகமானியா நகரில் உள்ள ரபீக் கான் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த முனீர்(வயது 25) என்பவரை தேசிய புலனாய்வு, உளவுப்பிரிவு அதிகாரிகள் மற்றும் ராமநகர் போலீசார் இணைந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர்.

மேலும் முனீர் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது பெங்களூரு நகரின் வரைபடம், கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்கள், மசூதிகள் மற்றும் சுற்றுலா தலங்களின் வரைபடங்களும், ஜெலட்டின் குச்சிகள், வெடிபொருட்கள், மடிக்கணினி ஆகியவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

கைதான முனீரிடம் நடத்திய விசாரணையில், அவரது சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் என்பதும், அவர் கடந்த 7 மாதங்களாக ராமநகரில் தங்கியிருந்து துணி வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. முனீர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் ரபீக் கான் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

கைதான முனீருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதால், அதுதொடர்பாக அவர் வைத்திருந்த மடிக்கணினியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கோவில்கள், மசூதிகள், சுற்றுலா தலங்களின் வரைபடங்கள் வைத்திருந்தது குறித்தும் முனீரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சுதந்திர தினத்தையொட்டி கர்நாடகத்தில் நாசவேலையில் ஈடுபட அவர் சதி திட்டம் தீட்டினாரா? என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைதான முனீரை ராமநகரில் இருந்து டெல்லிக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். அப்போது மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவம் ராமநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com