

நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஒட்டப்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 49). சித்த மருத்துவர். இவருடைய மனைவி சுமித்ராதேவி. இவர் ஓமியோபதி டாக்டர். இவர்கள் தனித்தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல இரவு இருவரும் கிளினிக்கை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக பாண்டியன், அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.