பட்டாசு வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே பட்டாசு வியாபாரியின் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பட்டாசு வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது மகாலிங்க நகர். இங்கு வசித்து வருபவர் அல்லா பகாஷ் (வயது 56). பட்டாசு வியாபாரி. மாந்திரீகம் தொழிலும் செய்து வருகிறார். இவர், தனது வீட்டின் முன்புறம் சிமெண்டு ஓடு போட்ட தனியறையில் உள்ள 2 பீரோக்களில் நகை, பணம் வைப்பது வழக்கம்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் அல்லா பகாஷ் மனைவி சுபேதா வழக்கம் போல் தொழுகை செய்வதற்காக எழுந்தார். வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றபோது அது வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து சுபேதா, கதவின் உள்புறம் உள்ள மேல்தாழ்பாளை திறந்து வேகமாக கதவை இழுத்தபோது கதவு திறந்து கொண்டது. சுபேதா வெளியே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் டார்ச்லைட்டுடன் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சுபேதா, தனது கணவர் அல்லா பகாஷிடம் தகவல் தெரிவித்தார். வீட்டின் முன்புறம் இரும்பு கேட்டின் அருகே சென்று பார்த்தபோது அதன் பூட்டு உடைக்கப்பட்டு, வெளிபுறம் இருந்த மின்விளக்குகள் அனைத்தும் கழற்றி எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் வீட்டின் வாசல் கேட்டையொட்டி சிமெண்டு ஓடு போடப்பட்டு உள்ள தனியறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த 2 பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அல்லா பகாஷ் தனது வீட்டின் வெளிப்புறம் உள்ள சிமெண்டு ஓடு போட்ட பாதுகாப்பற்ற தனி அறையில் தான் நகை மற்றும் பணத்தை எப்போதும் வைத்திருப்பார் என்பதை முன்கூட்டியே அறிந்தவர்களே திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என போலீசார் கருதுகின்றனர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து கைரேகை தடயங்களை சேகரித்தனர். இது தவிர துப்பு துலக்கிட மோப்ப நாய் அழைத்து வரப்பட்டது. மர்ம கும்பலை கூண்டோடு பிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் எளாவூர் வீராசாமி நகரை சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான சரக்கு வேனை திருடி டீசல் இல்லாததால் அல்லா பகாஷ் வீட்டின் முன்புறம் நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பின்னர் சரக்கு வேன் ராமனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com