வீடுகட்டும் பணியின்போது அஸ்திவார மண் சரிந்து தொழிலாளி பரிதாப சாவு

வீடுகட்டும் பணியின்போது அஸ்திவார மண் சரிந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வீடுகட்டும் பணியின்போது அஸ்திவார மண் சரிந்து தொழிலாளி பரிதாப சாவு
Published on

ஈரோடு,

ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 63). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு-நசியனூர் ரோடு வாய்க்கால்மேடு பகுதியில் செந்தில் என்பவருக்கு சொந்தமான வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். அந்த வீட்டுக்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டு பில்லர்கள் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் செல்வம் உள்பட சில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அஸ்திவாரத்திற்காக தோண்டப்பட்ட 7 அடி ஆழமுள்ள குழிக்குள் செல்வம் இறங்கி வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேல் பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய செல்வம் மண்ணுக்குள் புதைந்தார்

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவர் மீது விழுந்த மண்ணை உடனடியாக அகற்றினார்கள். எனினும் செல்வம் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, கிராம நிர்வாக அதிகாரிகள் யசோதா, சாஜிதாபானு ஆகியோரும் அங்கு வந்தனர்.

அப்போது செல்வத்தின் உறவினர்கள் போலீசாரிடம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதனால் போலீசார் செல்வத்தின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மண்ணில் புதைந்து தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com