விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டியதால் இளம்பெண் தீக்குளிப்பு; கணவர் கைது

விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டியதால் இளம்பெண் தீக்குளித்தார். இதையடுத்து, அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மாமியார் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டியதால் இளம்பெண் தீக்குளிப்பு; கணவர் கைது
Published on

கிருஷ்ணராயபுரம்,

குழந்தை இல்லை

லாலாபேட்டையை அடுத்துள்ள முத்தம்பட்டி கலத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 48). இவரது மகள் மணிமேகலை (22). இவருக்கும் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள துலுக்கம்பட்டியை சேர்ந்த துரைசாமி மகன் கோபிக்கும் (23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு குழந்தை இல்லாததால் மணிமேகலையை அவரது மாமியார் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமேகலை தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கணவர் கைது

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த மணிமேகலையை அவரது கணவர் விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மணிமேகலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில், உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த சம்பவம் குறித்து மணிமேகலையின் தந்தை தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், மணிமேகலையை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கோபியை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோபியின் தந்தை, தாய், சகோதரன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com