

மனைவி சாவு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே காஞ்சிவயல் பெருமாள்கோவில் தெருவில் வசித்து வந்தவர் தங்கமணி (வயது 26). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அபிநயா (19) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தாய் வீட்டில் இருந்த அபிநயாவிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. மேலும் வயிற்று வலி தாங்காமல் அபிநயா தூக்குபோட்டு கொண்டார்.
அக்கம்பக்கத்தினர் அபிநயாவை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கடந்த 28-ந் தேதி அனுமதித்தனர். அங்கு அபிநயா சிகிச்சை பலனின்றி 30-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தங்கமணி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
கணவன் தற்கொலை
இந்த நிலையில் காஞ்சியம்மன் கோவில் அருகே இருந்த முட்புதருக்குள் தங்கமணி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை கண்ட கிராம மக்கள் திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தங்கமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமான 8 மாதத்தில் மனைவியும் கணவனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொன்னேரி ஆர்.டி.ஓ. இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்.