பெண்ணை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவர் கொலை: இளநீர் வியாபாரிக்கு ஆயுள்தண்டனை

பெண்ணை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவர் கொலை வழக்கில் இளநீர் வியாபாரிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
பெண்ணை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவர் கொலை: இளநீர் வியாபாரிக்கு ஆயுள்தண்டனை
Published on

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் துர்கா (வயது 27). இவருடைய கணவர் வினோத்குமார் (32). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். வினோத்குமார், பீரோ தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். துர்காவை, அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஊரணி கோட்டை கிராமத்தை சேர்ந்த முத்துவேல் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கிண்டல் செய்தார். இதை வினோத்குமார் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துவேல், வினோத்குமாரை கத்தியால் வெட்டிக்கொலை செய்தார்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் டி.சுரேஷ் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, முத்துவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com