

குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் மனைவி ராமபிரபா (வயது 43). சம்பவத்தன்று இவர் தனது அண்ணனான குளித்தலை அருகே உள்ள மேலகுறப்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (48) என்பவரிடம், தனது கணவரை மது குடிக்க அடிக்கடி டாஸ்மாக் கடைக்கு எதற்காக அழைத்து செல்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் அண்ணன்-தங்கைக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவிக்குமார், ராமபிரபாவின் சேலையை பிடித்து இழுத்து, தகாத வார்த்தையால் திட்டினார்.
பின்னர் ரவிக்குமார் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தங்கை என்றும் பாராமல் ராமபிரபாவை குத்தியுள்ளார். இதனால் ராமபிரபா சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வருவதைப் பார்த்த ரவிகுமார், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் ராமபிரபா படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ராமபிரபாவை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அழிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து ராமபிரபா குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ரவிக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.