நான் கவர்னரை சந்தித்ததாக வெளியான தகவல் தவறானது மத்திய மந்திரி பேட்டி

நான் கவர்னரை சந்தித்ததாக வெளியான தகவல் தவறானது என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
நான் கவர்னரை சந்தித்ததாக வெளியான தகவல் தவறானது மத்திய மந்திரி பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை பெங்களூரு ராஜ்பவனில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியும், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா மேலிட பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. சித்தராமையா மீது நில முறைகேடு வழக்கு தொடர கோரும் மனுவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக அவர்கள் விவாதித்ததாக கூறப்பட்டது. இதை பிரகாஷ் ஜவடேகர் முழுவதுமாக மறுத்தார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் கவர்னரை சந்தித்து பேசியதாகவும், சித்தராமையா மீது வழக்கு தொடர்வது குறித்த மனுவுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறி இருக்கிறார். இந்த தகவல் முற்றிலும் தவறானது.

எந்த ஆதாரமும் இல்லாமல் தவறான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறுவது சரியல்ல. இதை நான் கண்டிக்கிறேன். மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் எந்த முயற்சியும் செய்யவில்லை. இப்போது குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொடுக்க கோவா அரசு முன் வந்துள்ளது.

இதில் இங்குள்ள காங்கிரஸ் அரசு அரசியல் நடத்துகிறது. பா.ஜனதா கட்சியை வில்லனை போல் முன்னிறுத்த இந்த அரசு முயற்சி செய்கிறது. இது சரியல்ல. கலசாபண்டூரி திட்ட பணிகளுக்கு சித்தராமையா ஆட்சிக்கு வந்த பிறகு நிதி ஒதுக்கவில்லை. இந்த பிரச்சினையை தீர்க்க இந்த அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் பொய் தகவல்களை பரப்புகிறது.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com