

பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஆதிதிராவிடர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் குமாரசாமி கலந்துரையாடும் நிகழ்ச்சி பெங்களூரு டவுன் ஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு குமாரசாமி பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசு பணியில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எங்கள் கட்சி ஆதரவு வழங்கியது. இதற்கு நான் ஆதரவு வழங்க மாட்டேன் என்று சொன்னதாக புரளி கிளப்பிவிட்டனர். நான் எங்கும் அப்படி ஒரு கருத்தை சொல்லவே இல்லை.
அரசு இயற்றும் அந்த மசோதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று தான் சட்டசபையில் சொன்னேன். கர்நாடகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்று, நான் முதல்மந்திரி ஆவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆதிதிராவிடர்களின் ஆதரவில் தான் நான் அரசியலுக்குள் நுழைந்தபோது வெற்றி பெற்றேன்.
நான் முதல்மந்திரி ஆன பிறகு அடுத்த ஒரு மாதத்தில் ஆதிதிராவிடர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன். என் மீது நீங்கள் சந்தேகப்படுவது ஏன் என்பது தெரியவில்லை. நாட்டில் தற்போது தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். இதற்கு பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். கர்நாடக அரசு இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.