“நெருங்கி பழகிவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் கொன்றேன்” - கைதான கூட்டுறவு வங்கி இயக்குனர் பரபரப்பு வாக்குமூலம்

நெருங்கி பழகிவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண்ணை வெட்டிக் கொன்றதாக கைதான கூட்டுறவு வங்கி இயக்குனர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
“நெருங்கி பழகிவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் கொன்றேன்” - கைதான கூட்டுறவு வங்கி இயக்குனர் பரபரப்பு வாக்குமூலம்
Published on

பொங்கலூர்,

நெருங்கி பழகிவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண்ணை வெட்டிக் கொன்றதாக கைதான கூட்டுறவு வங்கி இயக்குனர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள கழிவு பஞ்சு குடோனில் வேலை செய்து வந்தார். வேலுமணியின் கணவர் காளிமுத்து ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு புவனா(19) என்ற மகளும், சந்திரபோஸ்(11) என்ற மகனும் உள்ளனர். இதில் புவனாவிற்கு திருமணம் ஆகிவிட்டதால் கணவருடன் வசித்து வருகிறார்.

சந்திரபோஸ் பெருந்தொழுவு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். காலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்லும் முன்பாக தனது மகனை பள்ளிக்கு அந்த வழியாக வரும் அரசு பஸ்சில் ஏற்றி விட்டு பின்னர் வேலைக்கு செல்வது வேலுமணியின் வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று காலையில் சந்திரபோசை ஊரின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வேலுமணி அழைத்துச்சென்றார். அங்கு மகனை பஸ் ஏற்றி விட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த நாச்சிமுத்து(60) என்பவர் அங்கு வந்து வேலுமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த நாச்சிமுத்து தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் வேலுமணியின் கழுத்து மற்றும் வலது கையில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். கழுத்தில் ஆழமான வெட்டு விழுந்ததால் வேலுமணி அதே இடத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நாச்சிமுத்துவை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர்-தாராபுரம் சாலையில் குப்புச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே நாச்சிமுத்து நின்றிந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான நாச்சிமுத்து போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு;-

நானும், வேலுமணியும் கடந்த 2 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்தோம். எனக்கும் மனைவி இல்லாததால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அதற்கு வேலுமணி மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும் என்னிடம் பழகுவதை தவிர்த்து வந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்.

இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நாச்சிமுத்துவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள நாச்சிமுத்து கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com