திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கர்ப்பிணியாக இருந்த மாணவியை கழுத்தை நெரித்து கொன்றேன்

தர்மபுரி அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கர்ப்பிணியாக இருந்த பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைதான காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கர்ப்பிணியாக இருந்த மாணவியை கழுத்தை நெரித்து கொன்றேன்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரிச்சாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வஜ்ரம். இவருடைய மகள் லட்சுமி(வயது 14). இவள் கம்பைநல்லூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு புறப்பட்டு சென்ற லட்சுமி முள்ளனூர் ஆற்றின் கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணாபுரம் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாணவி லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவி லட்சுமி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவளுடன் பழகிய அதே ஊரைச் சேர்ந்த பிரதாப்(வயது 27) என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்தான் மாணவியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரதாப்பை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது:-

கல் உடைக்கும் தொழிலாளியான பிரதாப், மாணவி லட்சுமியின் தூரத்து உறவினர். இந்த நிலையில் பிரதாப், லட்சுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். இதை நம்பி லட்சுமி அவருடன் நெருங்கி பழகினாள். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் பிரதாப் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி லட்சுமி கர்ப்பமடைந்தாள். உடனே, அவள் தான் 2 மாத கர்ப்பமாக இருப்பதாக பிரதாப்பிடம் கூறி தன்னை திருமணம் செய்ய கூறினாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப் அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி, பள்ளிக்கு சென்ற மாணவி லட்சுமியிடம் நைசாக பேசி அவளை முள்ளனூரில் உள்ள ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிரதாப், மாணவியின் உடலை ஆற்றங்கரையோரத்தில் உள்ள பாலத்தின் கீழ் போட்டு விட்டு சென்று விட்டார்.

இவ்வாறு பிரதாப் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து பிரதாப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்ப்பிணியான மாணவியை காதலனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிரதாப்பிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com