கள்ளத்தொடர்பை கண்டித்த தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

கள்ளத்தொடர்பை கண்டித்த தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளத்தொடர்பை கண்டித்த தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் ஆனேக்கல் அடுத்துள்ளது ஸ்ரீராம்புரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இவரது மனைவிக்கும், முனியப்பா (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இது குறித்து அறிந்த ரமேஷ், தனது மனைவி மற்றும் முனியப்பா ஆகியோரை கண்டித்தார். மேலும் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு அவர்கள் 2 பேரையும் ரமேஷ் வற்புறுத்தினார். ஆனாலும் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்து வந்தனர்.

இதனால் ரமேஷ் - முனியப்பா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தனது உல்லாச வாழ்க்கைக்கு ரமேஷ் இடையூறாக இருப்பதாக கருதிய முனியப்பா, அவரை தீர்த்து கட்ட திட்டம் போட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு முனியப்பா தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரமேசை சுட்டார். இதில் ரமேசின் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ரமேசை சுட்டுக் கொலை செய்ததும் முனியப்பா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த கொலை குறித்து பொதுமக்கள் ஜிகினி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு வந்து ரமேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பாவை நேற்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com