3 நாளில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கர்நாடகம் திரும்பிய எடியூரப்பா பேட்டி

3 நாளில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்துவிட்டு கர்நாடகம் திரும்பிய முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
3 நாளில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கர்நாடகம் திரும்பிய எடியூரப்பா பேட்டி
Published on

பெங்களூரு,

உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 19-ந் தேதி சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். 6 நாட்கள் சுற்றுப்பயணத்திற்கு பிறகு அவர் நேற்று பகல் 3.30 மணியளவில் விமானம் மூலம் பெங்களூரு வந்தார்.

கம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் எடியூரப்பாவை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் வரவேற்றனர். அதன் பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் இப்போது தான் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு வந்துள்ளேன். கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்திற்கு எங்கள் கட்சி மேலிடம் அனுமதி வழங்கிவிட்டது. மீண்டும் டெல்லி செல்ல வேண்டிய தேவை இல்லை. ஆயினும் கட்சி மேலிட தலைவர்களுடன் ஒரு முறை ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளேன்.

மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய எந்த சிக்கலும் இல்லை. இன்னும் 3 நாட்களில் கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்வோம். இல்லாவிட்டால் இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்வோம். நாளை (அதாவது இன்று) மத்திய மந்திரி நிதின் கட்காரி பெங்களூரு வருகிறார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் மந்திரி பதவி வழங்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதற்கிடையே இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ., மந்திரிசபை விரிவாக்கம் செய்யாதது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறினார். தகுதிநீக்க எம்.எல்.ஏ. ஆர்.சங்கர், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உள்பட பா.ஜனதாவில் சேர்ந்த அனைவருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

எடியூரப்பா பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததும், ஏராளமான ஆதரவாளர்கள் அவரை சந்திக்க வந்தனர். இதனால் அவரது இல்லம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com