மோட்டார் சைக்கிள்கள் மோதலில் அண்ணன்-தம்பி பலி: உடல்களை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை - அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம்

ஆரணி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் வாலிபர் பலியான சம்பவத்தில் அவரது அண்ணனும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். விபத்துக்குக் காரணமானவர்களை கைது செய்யும் வரை இருவரது உடல்களையும் வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதலில் அண்ணன்-தம்பி பலி: உடல்களை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை - அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம்
Published on

ஆரணி,

ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார் (வயது 21), சிவபிரசாத் (17). நேற்று முன்தினம் தந்தை சிவக்குமாரின் நினைவுநாளையொட்டி இருவரும் மோட்டார்சைக்களில் ஆரணிக்கு வந்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த வழியாக எதிரே கல்பூண்டி காலனி பகுதியைச் சேர்ந்த வரதனின் மகன் வடிவேல் ஒரு மோட்டார்சைக்கிளில் வந்தார். அவருடன் வேலு என்பவரும் வந்தார். பால் பண்ணை அருகே வந்தபோது, இரு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில் சிவபிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சிவராஜ்குமார் படுகாயம் அடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்து முதலுதவி பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சிவராஜ்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யாததால், விபத்தில் பலியான சிவபிரசாத், சிவராஜ்குமார் ஆகியோரின் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று பகல் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தைச் சூழ்ந்து முற்றுகையிட்டனர். அவர்கள், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம், எனக்கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வழியாகச் சென்ற அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தனது அலுவலகத்துக்குச் சென்று அமர்ந்திருந்தபோது, போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டிருந்த மொழுகம்பூண்டி கிராம மக்கள், அமைச்சரிடம் ஒரே வீட்டில் 2 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். அவர்களின் இறப்புக்குக் காரணமானவர்கள் மீது போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்தால் தான் நாங்கள் 2 உடல்களை பெற்றுச்செல்வோம் என முறையிட்டனர்.

இதையடுத்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை அழைத்து அமைச்சர் பேசினார். அப்போது அவர், விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். விபத்தில் பலியானவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்து, இறுதிச்சடங்கு செய்ய ஒத்துழைப்புக் கொடுங்கள், எனப் போலீசாருக்கு உத்தரவிட்டு, கிராம மக்களை சமரசம் செய்து அனுப்பினார். பின்னர் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com