குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

ஆற்காடு அருகே குடும்பத் தகராறில் மனைவியை கட்டையால் அடித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை
Published on

வேலூர்,

ஆற்காடு அருகே உள்ள கரடிமடை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40), தொழிலாளி. இவருடைய மனைவி இந்திரராணி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனந்தன் வேலைக்கு சரியாக செல்லாமல் வீட்டு செலவுக்கு மனைவியிடம் பணம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆனந்தனுக்கும், இந்திரராணிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு காரணமாக சில சமயங்களில் இந்திரராணி கணவரிடம் கோபித்து கொண்டு அப்பகுதியில் உள்ள அவரின் தாய் வீட்டிற்கு சென்று விடுவார்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி ஆனந்தன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதனால் கணவன்-மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் அங்கு கிடந்த கட்டையால் இந்திரராணியின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து ஆனந்தன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தனை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது.

விசாரணையின் முடிவில் நீதிபதி செல்வம், மனைவியை அடித்துக்கொலை செய்த ஆனந்தனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1,500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆனந்தனை வேனில் பலத்த காவலுடன் போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com