தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் முற்றுகை

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் முற்றுகை
Published on

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் ஆரோக்கியராஜ்(வயது 42). இவர், தண்ணீர் கேன்கள் வினியோகம் செய்து வந்தார். இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டதுடன், சற்று மனநலம் பாதிப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக அவர், பல்லாவரம் டேனரி தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரி தரப்பில் ரூ.35 ஆயிரத்தை முதலில் கட்டவேண்டும் என கூறினர். ஆனால் அல்போன்ஸ் ஆரோக்கியராஜின் சகோதரர் முதல் தவணையாக ரூ.24 ஆயிரம் கட்டி உள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரியில் அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதரருக்கு ஆஸ்பத்திரியில் இருந்து போனில் தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், தனியார் ஆஸ்பத்திரி வளாகம் முன் திரண்டு அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பல்லாவரம் போலீசார், அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்த போலீசார், உறவினர்களை சமரசம் செய்து அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் உரிய விசாரணை நடத்திய பிறகுதான் உடலை வாங்குவோம் என அல்போன்ஸ் ஆரோக்கியராஜின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com