நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடையும் எடியூரப்பா சொல்கிறார்

நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடையும் என்பதில் 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது என்று எடியூரப்பா தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடையும் எடியூரப்பா சொல்கிறார்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எலகங்கா அருகே உள்ள சொகுசுவிடுதியில் இருந்து பஸ்சில் விதானசவுதாவுக்கு வந்தனர். அவர்களுடன் அக்கட்சியின் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா வந்தார்.

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கூட்டணி அரசு கவிழுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் சட்டசபையில் எங்களது பலம் 105 ஆக உள்ளது. அதே வேளையில் கூட்டணி அரசின் பலம் 100 ஆக உள்ளது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடைவது உறுதி. இதில் 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து கூட்டணி அரசின் பலம் குறைவாக இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வாரா? என எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், பொறுத்திருந்து பாருங்கள் எனக் கூறினார்.

அதுபோல் காங்கிரசை சேர்ந்த (காக்வாட் தொகுதி) எம்.எல்.ஏ. ஸ்ரீமந்த்பட்டீல் மும்பையில் தனிக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறதே? என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு எடியூரப்பா, அவர் பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com