ஆலங்குளத்தில் பயங்கரம்: போலீஸ் நிலையம் முன் பெண் குத்திக்கொலை கணவர் வெறிச்செயல்

ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன் பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஆலங்குளத்தில் பயங்கரம்: போலீஸ் நிலையம் முன் பெண் குத்திக்கொலை கணவர் வெறிச்செயல்
Published on

ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 46). இவர் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

முருகனுக்கு, விருதுநகர் மாவட்டம் திரிச்சுழி பகுதியை சேர்ந்த சித்ரா (35) என்ற பெண்ணுடன் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சித்ராவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து பாவூர்சத்திரம் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார். சித்ராவுக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடைபெற்ற நிலையில், மூன்றாவதாக முருகனை திருமணம் செய்து உள்ளார். சித்ராவிற்கு 2-வது கணவர் மூலம் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அவர்களும் தற்போது சித்ராவுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சித்ரா ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்து இருந்தார். அதில், தனது மகளுக்கு முருகன் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறி இருந்தார்.

இதுதொடர்பாக போலீசார், முருகன், சித்ரா தரப்பை விசாரணைக்கு வரச்சொல்லி இருந்தனர். அதன்படி அவர்கள் நேற்று ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

பின்னர் விசாரணை முடிந்ததும் அவர்கள் வெளியே வந்தனர். அப்போது முருகன் திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சித்ராவின் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார்.

போலீஸ் நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த சிலர் முருகனை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

பின்னர் போலீசார் விரைந்து வந்து சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முருகனை வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன் பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com