ஆலங்குளத்தில் மாதர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்: மகளிர் சுயஉதவிக்குழுவினரின் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

மகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி, ஆலங்குளத்தில் மாதர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குளத்தில் மாதர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்: மகளிர் சுயஉதவிக்குழுவினரின் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
Published on

ஆலங்குளம்,

ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று காலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தாலுகா தலைவர் அழகுசுந்தரி தலைமை தாங்கினார். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடனுக்கான வட்டியை கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரையிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் கற்பகம், மாவட்ட துணை செலாளர் தங்கம், மாவட்ட குழு உறுப்பினர் மேனகா, தாலுகா செயலாளர் மல்லிகா, பொருளாளர் வசந்தி, துணை தலைவர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 82 பெண்கள் உள்பட 87 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதையடுத்து ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பட்டமுத்து, மாதர் சங்க நிர்வாகிகள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் அலுவலர்கள் ஆகியோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கடன் பெற்றவர்களிடம் அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதம் வரையிலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்க கூடாது. மேலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பணம் வசூலிக்க செல்ல கூடாது என நிதி நிறுவனங்களுக்கு தாசில்தார் அறிவுறுத்தினார். அதனை அவர்கள் ஏற்று கொண்டதால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com