அன்னவாசலில் 3 மளிகை கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

அன்னவாசலில் 3 மளிகை கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அன்னவாசலில் 3 மளிகை கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
Published on

அன்னவாசல்,

அன்னவாசல் பழைய சந்தைபேட்டை சாலையில் சரவணக்குமார், சாகுல் அமீது, ஜமால் முகமது ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை ஜமால்முகமது தனது கடையை திறக்க முயன்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அருகில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் சரவணக் குமார், சாகுல் அமீது கடைகளை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மூன்று நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கி கடைக்கு உள்ளே நுழைவதுபோல் பதிவு இருந்தது. இதையடுத்து அந்த பதிவை வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் அன்னவாசல் பஸ்நிலையம் அருகே புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி காரில் வந்தார். இதையடுத்து அவரது காரை மறித்தும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கலெக்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி யதையடுத்து காருக்கு வழிவிட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் அன்னவாசல் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com