சென்னை அசோக்நகரில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை அசோக்நகரில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை அசோக்நகரில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை,

சென்னை மேற்கு மாம்பலம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 34). இவரது மனைவி நந்தினி (33). இருவரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும், இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன்னர் மணிகண்டனுக்கு கொரோனா அறிகுறி தெரிந்ததாலும் சண்டை அதிகரித்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்பு, மணிகண்டன் வேலைக்குப் புறப்பட்டு சென்றுள்ளார்.

பின்னர் அலுவலகத்தில் இருந்து மணிகண்டன், நந்தினிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நந்தினி போனை எடுக்காததால், பக்கத்து வீட்டுக்காரரை சென்று பார்க்க கூறியுள்ளார். அவர், சென்று பார்த்தபோது நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அசோக்நகர் போலீசார் நந்தினியின் உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நந்தினி இறந்த விவகாரம் குறித்து மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வீடு திரும்பிய அவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் தம்பதி ஒரே நாளில் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com