பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினர்

பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினார்கள். போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினர்
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் தவறான முகவரி, தவறான செல்போன் உள்ளிட்ட தகவல்களை மாநகராட்சியிடம் கொடுத்து வந்தனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான 4 ஆயிரத்து 327 பேர் கடந்த 7-ந் தேதி வரை சுகாதாரத்துறையின் கைக்கு சிக்காமல் தலைமறைவாக இருந்தனர்.

அந்த கொரோனா நோயாளிகளால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் பீதி உருவானது. பெரும்பாலானோர் கொரோனா பாதிப்பு உறுதியானதும், தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி இருந்தார்கள். பலர் தவறான முகவரியை கொடுத்திருந்ததால் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினாலும், சிகிச்சை பெறுவதற்கு ஆஸ்பத்திரிக்கு வராமல் இருந்தனர்.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள கொரோனா நோயாளிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரம் காட்டினார்கள். குறிப்பாக போலீசாரின் உதவியுடன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்தவர்கள், தவறான முகவரி கொடுத்துவிட்டு சுற்றி திரிந்தவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதற்கான முயற்சியில் மாநகராட்சியின் சுகாதாரத்துறையினர் வெற்றியும் கண்டுள்ளனர்.

அதாவது தலைமறைவாக இருந்த 4 ஆயிரத்து 327 பேரில், 3,300 கொரோனா நோயாளிகள் போலீசார் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் ஆஸ்பத்திரியிலும், பலர் கொரோனா மையத்திலும், மேலும் சிலர் வீட்டு தனிமையிலும் வைக்கப்பட்டு உள்ளனர்.

அதாவது கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமறைவாகி விட்ட மற்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com