பெங்களூருவில், தொழிலாளி அடித்து கொலை 3 திருநங்கைகள் கைது-பரபரப்பு தகவல்கள்

பெங்களூருவில் ஆயத்த ஆடை தொழிற்சாலை தொழிலாளியை அடித்து கொலை செய்த திருநங்கைகள் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
பெங்களூருவில், தொழிலாளி அடித்து கொலை 3 திருநங்கைகள் கைது-பரபரப்பு தகவல்கள்
Published on

பெங்களூரு,

ராமநகர் (மாவட்டம்) டவுனை சேர்ந்தவர் ராஜேந்திரா. இவர் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ராமநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திராவை 3 திருநங்கைகள் அழைத்து சென்றனர். அங்கு ராஜேந்திராவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து திருநங்கைகளிடம், டாக்டர்கள் கேட்டனர்.

ஆனால் அவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள், ராமநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று 3 திருநங்கைகளையும் பிடித்து விசாரித்தனர். அப்போது ராஜேந்திராவை அடித்து கொலை செய்ததை திருநங்கைகள் 3 பேரும் ஒப்புக் கொண்டனர். இதனால் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதாவது ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ராஜேந்திரா, மாலையில் வேலை முடிந்ததும் திருநங்கை போல வேடம் அணிந்து பெங்களூரு நைஸ் ரோட்டில் நின்று வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் பெற்று வந்து உள்ளார். இதனால் திருநங்கைகளான தேவி, பாவனா, நித்யா ஆகியோருக்கு வருமானம் குறைந்து உள்ளது. மேலும் ராஜேந்திரா, திருநங்கை போல வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்று வந்ததும், தேவி, பாவனா, நித்யாவுக்கு தெரிந்து உள்ளது.

இந்த நிலையில் நைஸ் ரோட்டில் நின்று கொண்டு இருந்த ராஜேந்திராவிடம் இதுபற்றி தேவி, பாவனா, நித்யா ஆகியோர் கேட்டு உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் ராஜேந்திராவுக்கும், 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் 3 பேரும் சேர்ந்து ராஜேந்திராவை பிடித்து சரமாரியாக அடித்து உள்ளனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அவரை சிகிச்சைக்காக ராமநகர் ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் கொண்டு வந்து உள்ளனர். ஆனால் வழியிலேயே ராஜேந்திரா இறந்து உள்ளார். இதனால் 3 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து ராமநகர் போலீசார், எலெக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்து உள்ளனர். அதன்பேரில் ராமநகருக்கு சென்ற எலெக்ட்ரானிக் சிட்டி போலீசாரிடம் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். கைதான திருநங்கைகள் 3 பேர் மீதும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com