கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட ரவுடி கைது; வெடிகுண்டு பறிமுதல்

திருக்கனூர் அருகே ரவடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொரு ரவுடி கைது செய்யப்பட்டார். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் நாட்டு வெடிகுண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட ரவுடி கைது; வெடிகுண்டு பறிமுதல்
Published on

திருக்கனூர்,

வில்லியனூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் ரவுடி அருண் குமார். இவருக்கும் திருக்கனூர் அருகே உள்ள துத்திப்பட்டை சேர்ந்த மற்றொரு ரவுடி வெறி பிரதாப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு செல்லிப்பட்டு மேம்பாலம் அருகே ரவுடி அருண்குமாரை கொலை செய்ய வெறி பிரதாப் தரப்பினர் முயன்றனர். அதை அறிந்த அருண்குமார் தனது ஆதரவாளர்களுடன் அங்கு திரண்டு வந்ததால் வெறி பிரதாப் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது அவர்கள் விட்டுச் சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ரவுடி கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட இந்த மோதல் காரணமாக அந்த பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

இந்த சம்பவம் தொடர்பாக திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் 2 ரவுடி கோஷ்டிகளையும் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்ய திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடாத்தூர் -கைகிளப் பட்டு சாலையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த வெறி பிரதாப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்தி அவருடைய கூட்டாளி பாம் சூர்யாவையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவருடைய மற்ற கூட்டாளிகளையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேடப்பட்டு வந்த வெறி பிரதாப்பின் மற்ற கூட்டாளிகளில் ஒருவரான துத்திப்பட்டை சேர்ந்த ரவுடி குறள் என்ற குறளரசன் வழுதாவூரில் உள்ள கர்ம காரிய கொட்டகையில் பதுங்கி இருப்பதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் குறளரசன் தப்பி ஓடத் தொடங்கினார். உடனே போலீசார் அவரை துரத்தி சென்றனர். இதில் நிலை தடுமாறி குறளரசன் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரவுடி அருண்குமாரை கொலை செய்யும் முயற்சியில் வெறி பிரதாப்புடன் கொடாத்தூர் காலனியை சேர்ந்த டேவிட் மற்றும் செழியன் ஆகியோரும் வந்ததாக தெரிவித்தான்.

மேலும் அருண்குமாரை கொல்ல நாட்டு வெடிகுண்டு எடுத்து வந்ததாகவும், அப்போது அருண்குமாரின் கூட்டாளிகள் ஏராளமானோர் திரண்டதால் உயிருக்கு பயந்துபோய் நாட்டு வெடிகுண்டை செல்லிப்பட்டு பாலத்துக்கு கீழே புதூரில் மறைத்து வைத்துள்ளதாக குறளரசன் தெரிவித்தார்.

அந்த தகவலின் அடிப்படையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குறளரசனிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் இந்த வழக்கில் அருண் குமாரை கொலை செய்ய முயன்ற திட்டம் தீட்டியதாக டேவிட், இளஞ்செழியன் ஆகியோரை சேர்த்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com