கொள்ளை வழக்கில் கைதான அண்ணனுக்கு கஞ்சா கொடுத்த வாலிபர் கைது

கொள்ளை வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அண்ணனுக்கு கஞ்சா கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை வழக்கில் கைதான அண்ணனுக்கு கஞ்சா கொடுத்த வாலிபர் கைது
Published on

கடலூர் முதுநகர்,

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோசப் என்கிற பிரபுமணிகண்டன்(வயது 24). இவர் விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதியில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜோசப்பை பார்ப்பதற்காக அவரது தம்பி அருண்பாண்டியன்(23), கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு வந்தார். சிறை வளாகத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில் அவர் ஜோசப்பை பார்த்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அருண்பாண்டியன் தனது கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை தனது அண்ணன் ஜோசப்பிடம் கொடுத்தார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வார்டன் லட்சுமணபெருமாள் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அருண்பாண்டியனை மடக்கி பிடித்தார். பின்னர் இது தொடர்பாக சிறை காவலர்(பொறுப்பு) காந்தியிடம் தகவல் தெரிவித்தார்.

இது குறித்து சிறை காவலர்(பொறுப்பு) காந்தி, கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com