

ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 27-ந்தேதியும், நேற்றும் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் கருங்குளம் யூனியனில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படவில்லை என்று கூறி, செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் யூனியன் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று மாலையில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் செய்துங்கநல்லூர் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.