சிதம்பரத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை; ஊராட்சி தலைவர் கைது

சிதம்பரத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை அளித்த ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை; ஊராட்சி தலைவர் கைது
Published on

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 46). இவர் கே.ஆடூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். மேலும் இவர் சிதம்பரம் வடக்கு வீதியில் கிளினிக் வைத்து, பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் தணிகைவேல், மருத்துவ படிப்பு படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு புகார் சென்றது.

இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் உத்தரவின் பேரில் நகர இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், வடக்கு வீதியில் உள்ள கிளினிக்குக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தணிகைவேல், எம்.பி.பி.எஸ். படிக்காமல் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தணிகைவேலை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com