இழப்பீட்டு தொகை வழங்குவதில் காலதாமதம் ரெயிலை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்

இழப்பீட்டு தொகை வழங்குவது காலதாமதம் ஆனதால் ரெயிலை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இழப்பீட்டு தொகை வழங்குவதில் காலதாமதம் ரெயிலை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள் முபரக் பாஷா, தர்குனிஷா. பாலுச்செட்டிசத்திரத்தை சேர்ந்தவர் மும்தாஜ்பேகம், வாலாஜாபாத்தை சேர்ந்தவர் நிஷார் அகமது. இவர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ஒரு சென்ட் நிலத்தை கடந்த 1999-ம் ஆண்டு ரெயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது. அதற்குரிய இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்கக்கோரி அவர்களது சார்பில் காஞ்சீபுரம் சார்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு உடனடியாக அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.37 லட்சத்து 66 ஆயிரத்து 574 இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் ரெயில்வே நிர்வாகம் தாமதம் செய்து வந்தது.

இதையடுத்து திருப்பதி-புதுச்சேரி ரெயில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் வாகனம், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் வாகனம் மற்றும் கலெக்டர் அலுவலக அசையா சொத்துகளை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்திற்கு சென்ற கோர்ட்டு ஊழியர்கள் அங்கு நின்று கொண்டிருந்த திருப்பதி - புதுச்சேரி ரெயிலில் ஜப்தி செய்வதற்கான நோட்டீசை ஒட்டினர். இது போன்ற இழப்பீட்டு தொகை பிரச்சினையில் பஸ்சை அதிகாரிகள் ஜப்தி செய்வார்கள். ஆனால் ரெயிலை ஜப்தி செய்வதாக கூறி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ரெயில்வே ஊழியர்கள் இது குறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க சொல்வதாக தெரிவித்தனர். அதன் பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

கலெக்டரின் வாகனம், வருவாய்த்துறை அதிகாரியின் வாகனம் இல்லாததால் அவற்றை ஜப்தி செய்யவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com