மாணவிகளிடம் சில்மிஷம் செய்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம்

வேலூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகளிடம் சில்மிஷம் செய்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Published on

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த ஊசூர் கோவிந்தரெட்டிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் சதீஷ்குமார் என்பவர் கடந்த சில நாட்களாக மாணவிகள் சிலரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாணவிகள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து புகார் தெரிவித்த மாணவிகளிடம், தலைமை ஆசிரியை தனித்தனியாக விசாரணை நடத்தினார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் புலேந்திரனும் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

மாவட்ட கல்வி அலுவலரிடம், மாணவிகள் தங்கள் புகாரை பதிவு செய்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலருக்கு மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் சில்மிஷம் செய்ததாக புகாரில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியர் சதீஷ்குமாரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com