கடலூரில், வியாபாரி வீட்டில் முட்டையிட்டு அடைகாத்த சாரைப்பாம்பு பிடிபட்டது

கடலூரில் வியாபாரி வீட்டில் முட்டையிட்டு அடைகாத்த சாரைப்பாம்பு பிடிபட்டது.
கடலூரில், வியாபாரி வீட்டில் முட்டையிட்டு அடைகாத்த சாரைப்பாம்பு பிடிபட்டது
Published on

கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பம் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி. வியாபாரி. இவர் வீட்டு வளாகத்தில் வைத்திருந்த தேங்காய் மட்டை கழிவுகளை அப்புறப்படுத்த முயன்றார். அப்போது அதற்கு அடியில் பாம்பு ஒன்று முட்டையிட்டு அடைகாத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இது குறித்து பாம்பு பிடிக்கும் செல்லாவுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் செல்லாவும் பாம்பை பிடிப்பதற்கான உபகரணத்துடன் அங்கு வந்தார். இதற்கிடையே பாம்பை பிடிப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்த பொதுமக்கள் அங்கே திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தேங்காய் மட்டைகளை அகற்றி அதற்கு அடியில் முட்டையிட்டு அடைகாத்த பாம்பை செல்லா லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார். முட்டைகளையும் சேகரித்தார். பிடிபட்ட பாம்பு சுமார் 5 அடி நீளமுள்ள பெண் சாரைப்பாம்பு என்பது தெரியவந்தது. இது குறித்து செல்லா கூறும்போது, சாரைப்பாம்பு 8 முட்டைகளையிட்டு அடைகாத்துள்ளது. ஒரு முட்டை வயிற்றில் உள்ளது. சேகரிக்கப்பட்ட முட்டைகளையும், சாரைப்பாம்பையும் காப்புக்காட்டில் கொண்டு விட இருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அபூர்வ வெள்ளை நாகம் இருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரர் செல்லா அந்த அபூர்வ நாகத்தை பிடித்து சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com