காதல் கணவர் வீட்டின் முன் பெண் தற்கொலை முயற்சி திண்டுக்கல் அருகே பரபரப்பு

திண்டுக்கல் அருகே, காதல் கணவர் வீட்டின் முன் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் கணவர் வீட்டின் முன் பெண் தற்கொலை முயற்சி திண்டுக்கல் அருகே பரபரப்பு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் ரம்யா (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரும் வேலை பார்த்தார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து அசோக்கின் பெற்றோர் அவருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயன்றனர். இதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் அசோக்கின் உறவினர்கள் 2 பேர் சென்னைக்கு வந்தனர். அவருடைய தந்தைக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி, அசோக்கை ரெட்டியார்சத்திரத்துக்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ரம்யா, கணவரின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது, அவருடைய பெற்றோர் மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா, கடந்த மாதம் 14-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம், காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி மனு கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அசோக்கின் வீட்டுக்கு சென்ற ரம்யா, கணவரை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டார். அப்போது அவரை அசோக்கின் பெற்றோர், உறவினர்கள் திட்டினர். இதனால் மனமுடைந்த அவர், காதல் கணவர் வீட்டின் முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் கணவர் வீட்டின் முன்பு பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com