கூடுவாஞ்சேரியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது நகைகளை வாங்கிய 2 பேரும் சிக்கினர்

கூடுவாஞ்சேரியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடிய நகைகளை வாங்கிய பெண் உள்பட 2 பேரும் பிடிபட்டனர்.
கூடுவாஞ்சேரியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது நகைகளை வாங்கிய 2 பேரும் சிக்கினர்
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் அடிக்கடி வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவம் நடைபெற்று வந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கூடுவாஞ்சேரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீசார் வழிமறித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது கூடுவாஞ்சேரி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 5 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட வாலிபர் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது கனி (வயது 29) என்பதும், திருடிய நகைகளை சைதாப்பேட்டையை சேர்ந்த பாண்டிஸ்வரி (28), வேளச்சேரியை சேர்ந்த துரை நிஜாத் (27) ஆகியோரிடம் கொடுத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து முகமதுகனி மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய பாண்டிஸ்வரி, துரை நிஜாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com