கும்மிடிப்பூண்டியில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு - உடலை எடுத்து வந்த ஆம்புலன்சிலேயே உயிர் பிரிந்தது

கும்மிடிப்பூண்டியில் தந்தை இறந்த அதிர்ச்சியில் அவரது உடலை கொண்டு வந்த அதே ஆம்புலன்சில் மகனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டியில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு - உடலை எடுத்து வந்த ஆம்புலன்சிலேயே உயிர் பிரிந்தது
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் பிளைவுட் உற்பத்தி தொழிற்சாலையின் அலுவலக கணக்கு பிரிவின் மேலாளராக வேலை செய்து வந்தவர் மகேஷ் (வயது 34). இவர் தனது மனைவி, குழந்தை, தாய், தந்தை ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள அந்த தொழிற்சாலைக்கான குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று தனது தந்தை ராமசுப்பிரமணிக்கு (69) உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை சிகிச்சைக்காக மகேசும், அவரது தாயும் சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு செல்லும்போது அவசர தேவை கருதி பாடியநல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக ராமசுப்பிரமணியை உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு நேற்று மாலை மகேசும், அவரது தாயும் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். தந்தை ராமசுப்பிரமணி இறந்த சோகத்தில் மகேஷ் ஆம்புலன்சில் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதவாறு வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் ரெயில்வே மேம்பாலத்தின் மீது ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது மகேஷ் தனது தாய் மீது மாரடைப்பால் அப்படியே சரிந்து விழுந்தார். இதையடுத்து மகேசை தந்தை உடலுடன் கூடிய அதே ஆம்புலன்சில் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே மகேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனும் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரது உடல்களையும் அதே ஆம்புலன்சில் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com