கும்மிடிப்பூண்டியில் தலையில் கல்லைப்போட்டு வடமாநில வாலிபர் கொலை - மர்மகும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கும்மிடிப்பூண்டியில் ஏரிக்கரையோரம் வடநாட்டு வாலிபரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் தலையில் கல்லைப்போட்டு வடமாநில வாலிபர் கொலை - மர்மகும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டி உள்ள தாமரை ஏரிகரையோரம் நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடப்பதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது அங்கு வாலிபரின் தலையில் யாரோ மர்மநபர்கள் சிலர் கல்லைப்போட்டு கொலை செய்திருப்பதும், கொலை செய்யப்பட்டவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் உறுதியானது.

ஆனால் அவர் குறித்த விவரம் தெரியவில்லை. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் என்றும், அவர் ஏரிக்கரையோரம் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து, கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் சத்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? வழிப்பறி செய்யும் நோக்கில் கொலை நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com