காலாப்பட்டில் மோதல்: வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து ஆரம்ப சுகதார நிலையம் சூறை

காலாப்பட்டில் ஏற்பட்ட தகராறில் ஒரு வாலிபர் பீர்பாட்டிலால் குத்தப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் அந்த ஆரம்ப சுகாதார நிலையம் சூறையாடப்பட்டது. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காலாப்பட்டில் மோதல்: வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து ஆரம்ப சுகதார நிலையம் சூறை
Published on

காலாப்பட்டு,

புதுச்சேரி பெரிய காலாப்பட்டு மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 27). இவர் காணும் பொங்கல் தினத்தன்று அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 4 வாலிபர்கள் மதுகுடித்துவிட்டு மதுபோதையில் கூச்சலிட்டபடி மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர்.

அதனை மணிகண்டன் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் மணிகண்டன் இரவில் காலாப்பட்டு பகுதிக்கு சென்றார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த முகேஷ், சூர்யா, சற்குரு, ராஜ்குமார் ஆகியோர் மணிகண்டனை தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர். தகராறு முற்றியதில் அவரை பீர்பாட்டிலால் குத்தினர்.

இதில் தலையில் காயம் அடைந்த மணிகண்டனை அவருடைய தரப்பினர் மீட்டு சிகிச்சைக்காக காலாப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அங்கு பணியில் இருக்க வேண்டிய டாக்டர் இல்லை. அதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தரப்பினர் ஆரம்ப சுகாதார நிலைய கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். மேலும் அங்கிருந்த பொருட்களையும் சூறையாடினர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் தாக்கப்பட்டது தொடர்பாக காலாப்பட்டு குப்பம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையம் சூறையாடப்பட்ட சம்பவத்தில் மணிகண்டனின் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com