கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு: மலை மாதேஸ்வரா கோவிலை ஆபாசமாக சித்தரித்த பிரபல பாடகர் எதிர்ப்பு வலுத்ததால் - மன்னிப்பு கோரினார்

கர்நாடகத்தில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலை ஆபாசமாக சித்தரித்து பிரபல பாடகர் ஒருவர் இசை ஆல்பம் வெளியிட்டார். அவருக்கு எதிராக எதிர்ப்பு வலுத்ததால் அவர் மன்னிப்பு கோரினார். இச்சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு.
கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு: மலை மாதேஸ்வரா கோவிலை ஆபாசமாக சித்தரித்த பிரபல பாடகர் எதிர்ப்பு வலுத்ததால் - மன்னிப்பு கோரினார்
Published on

பெங்களூரு,

கன்னட திரைத்துறையில் பிரபல இசையமைப்பாளராக இருந்து வருபவர் சந்தன் ஷெட்டி. இவருக்கு பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர், ராப் பாடல் கலைஞர் என்ற பன்முகங்களும் உண்டு. மேலும் இசை ஆல்பம் தயாரித்து வெளியிட்டு வந்தார். மக்களிடையே ராப் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். இளம் இசையமைப்பாளராக இருந்து வரும் இவர் கன்னட தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் பிக்-பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றிபெற்றார்.

பிரபலமான இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இவர் கடந்த ஆண்டு பிரசித்திபெற்ற வரலாற்று சிறப்புமிக்க தசரா விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பிக்பாசில் தனது சக போட்டியாளரும், பின்னணி பாடகியுமான நிவேதிதாவை காதலித்தார். பிக்-பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில், தசரா விழாவில் பங்கேற்ற அவர் பாடகி நிவேதிதாவுடன் இளைஞர் தசரா விழாவில் பங்கேற்று மேடையில் பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் திடீரென தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிவேதிதாவிடம் சந்தன் ஷெட்டி கேட்டார். மேலும் அவருக்கு மோதிரம் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். அந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் சந்தன் ஷெட்டிக்கு ஆதரவாகவும், ஏராளமானோர் அவருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். அவருக்கு பலர் கண்டனங்களும் தெரிவித்தனர்.

பின்னர் சந்தன் ஷெட்டி, நிவேதிதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சந்தன் ஷெட்டி மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அதாவது கடந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று(22-ந் தேதி) சந்தன் ஷெட்டி கோலு மண்டே ஜங்கம்மா தேவரு என்ற ஒரு இசை ஆல்பத்தை யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த இசை ஆல்பத்தில் அவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் வீற்றிருக்கும் பிரசித்திபெற்ற மலை மாதேஸ்வரா கோவிலையும், மூலவர் மாதப்பன் சாமியையும் அவதூறாக விமர்சித்தும், ஆபாசமாக சித்தரித்தும் பாடி இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு இந்து அமைப்பினர், மலை மாதேஸ்வரா கோவில் பக்தர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்தன் ஷெட்டியை கைது செய்ய வேண்டும் என்றும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்தனர். அதற்குள் அந்த இசை ஆல்பத்தை 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருந்தனர்.

தனக்கு எதிராக எதிர்ப்பு வலுத்ததை அடுத்து நேற்று மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு சந்தன் ஷெட்டி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து தன்னுடைய இசை ஆல்பத்தையும் நீக்கினார். இதனால் இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்பினர் சமாதானம் அடைந்தனர். இச்சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com