

திருவொற்றியூர்,
சென்னை மணலியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சலூன் கடை உரிமையாளர் ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மணலி பெரியதோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடி அரி, சோழவரத்தை சேர்ந்த சதீஷ் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைத்து வடசென்னை இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.இதையடுத்து மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரடி மேற்பார்வையில் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் உக்கிரபாண்டி, மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணகி முன்னிலையில் தனிப்படை அமைத்து ரவுடிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரவுடிகள் இருவரும் காட்டாங்கொளத்தூரில் பிரபல கல்லூரி இருக்கும் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
பின்னர் வீட்டில் பதுங்கி இருந்த மணலி பெரியதோப்பை சேர்ந்த அரி(வயது 25), சோழவரத்தை சேர்ந்த சதீஷ்(26), செங்குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த பசுபதி(26), மாத்தூர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திக் (25), வண்டலூர் ஓட்டேரி விரிவு பகுதி 9-வது மெயின் ரோட்டை சேர்ந்த செல்வக்குமார் (25), காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த குகன் ராஜ் (24) ஆகிய 6 ரவுடிகளையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் தங்கி இருந்த வீட்டை சோதனையிட்டபோது அங்கு 3 நாட்டு வெடிகுண்டுகள், 4 பெரிய அரிவாள்கள், 2 சிறிய கத்திகள் ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட ரவுடிகள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ரவுடி ஒருவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு 6 பேரும் நாட்டு வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
போலீசார் துரிதமாக செயல்பட்டு ரவுடிகளை கைது செய்ததால் ஒரு கொலை தடுக்கப்பட்டது. வடசென்னையில் ரவுடிகளை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டு உள்ளனர்.