கயத்தாறில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கயத்தாறில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
கயத்தாறில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
Published on

கயத்தாறு,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில், கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளையும் மினிலாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஏற்றி, கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவில் முன்பு கொண்டு வந்தனர். பின்னர் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கயத்தாறு வாரச்சந்தை ரோடு, விமான சாலை, மதுரை ரோடு, கடம்பூர் ரோடு, நாற்கர சாலை வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு, கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

சின்னப்பன் எம்.எல்.ஏ., இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன், ஒன்றிய தலைவர் செல்லத்துரை, நகர தலைவர் ரவி, ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், பூசாரி பேரவை தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி சார்பில், கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 27 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து விநாயகர் சிலைகளையும் வாகனங்களில் ஏற்றி, ஊர்வலமாக கயத்தாறு அகிலாண்ட ஈசுவரி அம்மன் கோவில் முன்பு கொண்டு வருகின்றனர். பின்னர் விநாயகர் சிலைகளை திருச்செந்தூருக்கு கொண்டு சென்று, கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com