கயத்தாறில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

மயானத்துக்கு செல்ல பாதை வசதி கேட்டு கயத்தாறில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
Published on

கயத்தாறு,

கயத்தாறு பாரதி நகரில் ஆதி திராவிட மக்கள் 40 ஆண்டுகளாக மயானத்துக்கு செல்ல பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் ஆக்கிரமித்து அடைத்து, மற்றவருக்கு விற்றதாக கூறப்படுகிறது. எனவே அப்பகுதி மக்கள் மயானத்துக்கு செல்ல பாதை வசதி கேட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மாடசாமி மனைவி கருப்பாயி (வயது 90) நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தந்தால்தான், மூதாட்டி கருப்பாயியின் உடலை அடக்கம் செய்வோம் என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் அங்குள்ள அம்மன் கோவிலின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கயத்தாறு தாசில்தார் முருகானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ஆதம் அலி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளை கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மயானத்துக்கு செல்ல ஓரிரு நாளில் பாதை வசதி ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, மூதாட்டி கருப்பாயியின் உடலை வயல்வெளி வழியாக மாற்றுப்பாதையில் எடுத்து சென்று, மயானத்தில் அடக்கம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com