கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி கோட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் பட்டாசு தொழிற்சாலை மற்றும் விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காங்கிரஸ் நகர செயலாளர் சண்முகராஜ் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் முத்து, முன்னாள் வட்டார தலைவர்கள் கொம்பையா, சுந்தர்ராஜ், நகர துணைத்தலைவர் வேல்சாமி, சேவா தளம் சக்தி விநாயகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை உதவிகலெக்டர் விஜயாவிடம் வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலை மற்றும் பட்டாசு விற்பனை நிலையங்களில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் உரிமம் இன்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழிலும் நடந்து வருகிறது.

இதுபோன்ற பட்டாசு ஆலையில் விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.

இதனைத் தவிர்க்க கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் பட்டாசு விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். விதி மீறல்களில் ஈடுபட்டு வரும் பட்டாசு தொழிற்சாலை மற்றும் விற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com