கோவில்பட்டியில் நின்ற லாரி மீது பஸ் மோதல்; 25 பேர் காயம்

கோவில்பட்டியில் நின்ற லாரி மீது பஸ் மோதியதில் 25 பேர் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டியில் நின்ற லாரி மீது பஸ் மோதல்; 25 பேர் காயம்
Published on

கோவில்பட்டி,

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவில் மார்த்தாண்டத்துக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் டிரைவராக மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 49), மாற்று டிரைவராக மைக்கேல் ராஜ் (39) பணியாற்றினர். பஸ்சில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர்.

நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் கோவில்பட்டி பைபாஸ் ரோடு ஆவல்நத்தம் விலக்கு அருகில் சென்றபோது, அங்கு சாலையோரம் நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த டிரைவர்கள் பால்ராஜ், மைக்கேல்ராஜ் மற்றும் 9 பெண் பயணிகள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் அடைந்த 2 பயணிகளை தவிர மற்ற அனைவரும் சிகிச்சைக்கு பின்னர் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டியில் இருந்து சிமெண்டு லோடு ஏற்றிய லாரி, நெல்லை மாவட்டம் முக்கூடலுக்கு புறப்பட்டு சென்றது. அப்போது லாரியின் டயர் பஞ்சரானதால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரியின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com