கிருஷ்ணகிரியில் லாரி மீது சரக்கு வேன் மோதி டிரைவர் பரிதாப சாவு

கிருஷ்ணகிரியில் லாரி மீது சரக்கு வேன் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் லாரி மீது சரக்கு வேன் மோதி டிரைவர் பரிதாப சாவு
Published on

கிருஷ்ணகிரி,

சென்னை மணப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 33). சரக்கு வேன் டிரைவர். நேற்று முன்தினம் இவர் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் முன்னால் லாரி ஒன்று எந்தவித சிக்னல்களும் காட்டாத நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் மீது ராஜேந்திரன் ஓட்டிச் சென்ற வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவர் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று விபத்தில் பலியான ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com