குமாரபாளையத்தில் மாவட்ட தலைவரை கண்டித்து பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்

குமாரபாளையத்தில் மாவட்ட பா.ஜ.க. தலைவரை கண்டித்து அந்த கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
குமாரபாளையத்தில் மாவட்ட தலைவரை கண்டித்து பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்
Published on

குமாரபாளையம்,

குமாரபாளையம் நகர பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் ராஜூ. இவர் மீது பல குற்றச்சாட்டுகளை அதே கட்சியை சேர்ந்த சிலர் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்திக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்காமல் பா.ஜ.க. நாமக்கல் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜே.கே.கே.என் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.ஓம் சரவணாவை குற்றம்சாட்டி அவரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை பறித்ததாக கூறப்படுகிறது.

மாவட்ட தலைவரின் இந்த செயலை கண்டித்து நேற்று காலை பா.ஜ.க.வை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதுகுறித்து பா.ஜ.க. நகர துணைத்தலைவர் கிருஷ்ணன், நகர செயலாளர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஓம் சரவணா பொறுப்பேற்றபின் பா.ஜ.க. வளர்ச்சியை பெற்று வருகிறது. மேலும் ஏராளமான வாலிபர்கள், பெண்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கூட்டணி கட்சியை சேர்ந்த சிலரை திருப்திபடுத்த ஓம் சரவணாவை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி உள்ளனர் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com