பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார் காதல் கணவர் ஏமாற்றியதாக தங்கைக்கு இ-மெயிலில் தகவல்

சென்னை திருவான்மியூரில் பூட்டிய வீட்டுக்குள், காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். சாவதற்கு முன்பாக, தனது கணவர் தன்னை ஏமாற்றி விட்டதாக தங்கைக்கு இ-மெயிலில் தகவல் அனுப்பினார்.
பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார் காதல் கணவர் ஏமாற்றியதாக தங்கைக்கு இ-மெயிலில் தகவல்
Published on

அடையாறு,

நெல்லையை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 34). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது இவருக்கும், சென்னையில் வேலை செய்து வந்த விருத்தாசலத்தை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான வித்யா (27) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வித்யா, தனது சகோதரிக்கு ஒரு இ-மெயில் அனுப்பினார். அதில் அவர், எனது காதல் கணவர் சிவசங்கருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது. அதை மறைத்து என்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து விட்டார். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி இருந்ததாக தெரிகிறது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வித்யாவின் சகோதரி மற்றும் பெற்றோர் நேற்று திருவான்மியூரில் உள்ள வித்யாவின் வீட்டுக்கு வந்தனர். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.

வீட்டுக்குள் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவான்மியூர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு வித்யா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே அவர், இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் தூக்கில் தொங்கிய வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வித்யாவின் காதல் கணவர் சிவசங்கர் தலைமறைவாகி விட்டார். இது குறித்து திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவசங்கரை தேடி வருகின்றனர்.

அவர் பிடிபட்டால்தான் உண்மையில் நடந்தது என்ன?, வித்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு அவரது உடல் தூக்கில் தொங்க விடப்பட்டதா? என்பது போன்ற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com