மகராஜகடையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் நேரில் ஆய்வு

மகராஜகடையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் தூய்மை பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
மகராஜகடையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் நேரில் ஆய்வு
Published on

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் மகராஜகடையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் தூய்மை பணிகள் நடந்தன. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், வைரஸ் காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் லார்வா புழுக்கள் உருவாகாத வகையில் குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல், தொற்று நோய் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். மாவட்ட அளவில் சுகாதார துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கல்வித்துறை அலுவலர்களை கொண்ட குழுவினர் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் யாருக்கும் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரசன்ன வெங்கடேசன், ராஜா, பூச்சியல் வல்லுனர் டாக்டர் அனுராதா, வட்டார மருத்துவ அலுவலர் சுசீத்ரா, சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com